Wednesday, December 11, 2013

11-12-2013


இந்த நாளில் என்ன விஷயம் என்று தெரியவில்லை ஒவ்வொரு நாளையும்

விசேஷமாக கருதுபவர்கள் எல்லா நாளும் ஒன்று தான் 11-12-13 என்ன

விசேஷம் என்று புரியவில்லை அப்படி இருக்கும் போது 11-12-2013 அந்த

வருடத்தின் "20"13 எங்கே போயிற்று. 

Saturday, October 24, 2009

மன அழுத்தம் - இனியும் வேண்டாம்

இன்றைய பரபரப்பான உலகில், சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் கூறுவது 'ஐயோ ரொம்ப டென்ஷனாயிருக்கு' என்பதுதான். இத்தகைய பதட்டமும் படபடப்பும் அதிகரிக்கும்பொழுது சிலருக்கு அது மன அழுத்தத்தில் வந்து முடிந்துவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவு வரையிலான மன அழுத்தம் நேர்மறை மன அழுத்தம் எனப்படுகிறது. ஏனெனில் அது நம் செயல்திறன்அதிகரிக்க உதவுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சாகும்பொழுது மன அழுத்தத்தைப் பற்றிக் கூறவும் வேண்டுமா என்ன? அதிகமான மன அழுத்தம் எதிர்மறையாக மாறி மனச் சோர்வையும், மன உளைச்சலையும் உண்டாக்கிவிடுகிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் ஏராளம். மன அழுத்தத்தின் அறிகுறிகள் என்னென்ன என்றும், மன அழுத்தத்தைத் தவிர்ப்பது எப்படி என்றும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.








மன அழுத்தத்தால் ஏற்படும் தீமைகள்:

மன அழுத்தம் நம் உடலிலும், நம் மனப்போக்கிலும் பல மாறுதல்களை ஏற்படுத்துகிறது. பொதுவாக மன அழுத்தத்தினால் உடலில் தோன்றும் மாற்றங்கள் நாளடைவில் பல நோய்களை உண்டாக்கிவிடக்கூடும். எனவே, மன அழுத்தம் ஏற்படும்பொழுதே அதை அறிந்து கொண்டு, தக்க உபாயங்களை மேற்கொண்டால், அபாயங்களில் இருந்து தப்பிக்கலாம்.

நாளாவட்டத்தில், மன அழுத்தம் ஏற்படுகையில் நமது உடலில் சுரக்கும் திரவமான கார்டிசால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து விடுகிறது. மேலும், இன்சுலின் சுரப்பை இது குறைப்பதால், சர்க்கரை அளவு உடலில் அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலின் எடை கூடத் தொடங்குகிறது. இதன் காரணமாக அதிக இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டு வலி போன்றவை நம்மைத்தாக்க வாய்ப்பு உள்ளது. உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவதன் காரணமாக, மற்ற பல வித நோய்களின் தாக்குதலுக்கும் நாம் ஆளாக நேரிடலாம்.

மன அழுத்தம் அதிகரிக்கையில், நம் சிந்தனை, நாம் பிறரிடம் பேசும்/பழகும் விதம் எல்லாமே மாறிவிடுகிறது.இதன் காரணமாக வேலைசெய்யுமிடத்திலும் வீட்டிலும் சண்டை சச்சரவு ஏற்பட்டு நிம்மதிக்குலைவு ஏற்படலாம்

நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கிறீர்களா என்று எப்படித் தெரிந்து கொள்வது?

ஐயோ! ஆயிரம் வேலை பாக்கியிருக்கிறது.. தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது என்று அடிக்கடி தோன்றுகிறதா? அடுத்தவர்கள் மீது கோபம் வருகிறதா? அடிக்கடி தலைவலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கு உள்ளாகிறீர்களா? படபடப்பும் பதட்டமும் ஏற்படுகிறதா? கவனம்.. நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கக் கூடும்.

இதயத்துடிப்பு அதிகரித்தல், தொடர்ச்சியான தலைவலி, அதிகமான வியர்வை, குறிப்பாக உள்ளங்கைகள் வியர்த்தல், மிக வேகமாக மூச்சு விடுதல்,வயிற்றுக் கோளாறுகள், முதுகு வலி, கழுத்திலும் இடுப்பிலும் ஏற்படும் தசைப்பிடிப்பு முதலியவை, அதிக மன அழுத்தத்தால் உடலில் பொதுவாக ஏற்படக் கூடிய அறிகுறிகள்.

சின்னச்சின்ன விஷயங்களைக் கையாள்வது கூடக் கடினமாகி விடுதல், சிறு தவறுகளுக்குக் கூட மிகுந்த எரிச்சலடைந்து கூச்சல் போடுதல், மிகவும் களைப்பாக உணர்தல், எதிலும் கவனம் செலுத்த இயலாமை, உப்புப் பெறாத விசயத்திற்கெல்லாம், மலையே இடிந்து விட்டது போல் கவலைப் படுதல், எதையோ இழந்ததுபோல் உணர்தல், ஏதாவது கெட்ட காரியம் நடந்துவிடும் என்று அச்சமடைதல், பிறரிடம் எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்தல் என்று நம் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

மன அழுத்தம் ஏற்பட்டிருப்பவர்கள் அதை எப்படிக் கையாளலாம்?

சிலருக்கு, தனக்கு மன அழுத்தம் இருப்பது புரியும். ஆனால் அவர்களில் ஒரு சாரார் அதை அலட்சியப்படுத்தவோ நியாயப் படுத்தவோ முற்படுவர்.

"கொஞ்ச நாளாக வேலைப்பளு அதிகரித்துவிட்டது, அதனால்தான் டென்ஷன்" என்றும், "இந்த வீட்டில் எல்லாமே ஏடாகூடமாகத்தான் இருக்கும்" என்றும் " என் அலுவலர் மோசம்/என் மனைவி (அல்லது கணவர்) அனாவசியமாக என்னைத் தொல்லைப் படுத்துகிறாள்(ர்)" என்றும் தமது மன அழுத்தத்திற்குப் பல காரணங்களைக் கற்பிப்பார்கள். தம் குறையை வெளிப்படுத்தவோ, சரி செய்துகொள்ளவோ முயற்சி செய்ய மாட்டார்கள்.

பிற வகையினரோ, தவறான வழிகளில் அதிலிருந்து விடுபட முற்படுவர். புகை பிடித்தல், மது அருந்துதல், எப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பது அல்லது சாப்பிடாமல் பட்டினி கிடப்பது, தொலைக்காட்சி அல்லது கணிணியே கதியாகக் கிடப்பது, அதிகம் தூங்குவது, காரணமில்லாது நம் கோபத்தைப் பிறர் மீது காட்டுவது, அடி உதையில் இறங்குவது, தூக்க மருந்துகள் அல்லது போதைப்பொருட்களை உட்கொள்வது, செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளிப் போடுவது என பல விதமாக தமது மன அழுத்தத்தைக் குறைக்கவோ, திசை திருப்பவோ முயலுவர்.

இந்த இரண்டுமே நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக மோசமாக்கிவிடுகின்றன. இவற்றால் மனநிலையும் உடல் நிலையும் மென்மேலும் சீர்கேடு அடையத் தொடங்குகின்றன. பிறருடனான உறவும் நட்பும் கூட கெட்டுவிடுகிறது. எனவே, மன அழுத்தத்தைச் சரி செய்ய, சில சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதற்கு முதலில், சுய அலசல் தேவை. இந்தப் பிரச்னையில் இருந்து விடுபடவேண்டும் என்ற முனைப்பும், மாற்றங்களுக்குத் தயார் செய்துகொள்ளும் மனமும் வேண்டும்.


"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல்தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை.

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்". என்ற கண்ணதாசனின் வரிகளைக் கடைப்பிடிப்பதுதான் மன அழுத்தத்திற்கான சரியான மருந்து.

மனிதர்களின் உடலமைப்பு மட்டுமல்ல, மனப்போக்கும் வேறுபடக்கூடும். ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்பும் தனித்தன்மையுடையது. எனவே, மன அழுத்தத்திற்கான காரணிகளும், அதைப் போக்குவதற்கான வழிமுறைகளும்கூட மனிதருக்கு மனிதர் வேறுபடும். எனினும், சில பொதுவான யோசனைகளை தொடரும் கட்டுரையில் காண்போம்.

(Source:- http://eelanation.com)